வடக்கு, கிழக்கில் த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும்!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியது நானே. யுத்தம் நடைபெறுகையில் பாராளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்கவேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்க தலைவரிடம் கூறி நானே த.தே.கூட்டமைப்பை உருவாக்கினேன்.

இவ்வாறு தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சரும் திகாமடுல்லை (அம்பாறை) மாவட்ட வேட்பாளருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பொத்துவில் ஊறணி எனுமிடத்தில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
வடக்கு கிழக்கில் இம்முறை த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும். கொழும்பை மையமாக வைத்தியங்கும் சுமந்திரன் ரணிலின் முகவர். தமிழர்களை விற்றவர். வடக்கு கிழக்கை அவருக்கு தெரியாது. இன்று போராளிகளை கொச்சைப்படுத்துகிறார். யாழ். மக்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

அன்று அக்கட்சியில் இருந்தவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள். இன்று அத்தனை பேரும் கள்வர்கள். தமிழர்களை விற்று பணம் சம்பாதித்தவர்கள். என்று சுமந்திரன் அதற்குள் புகுந்தாரோ அன்றோடு கூட்டமைப்பு அழிவை எதிர்நோக்கியது.

Related posts