3-வது திருமணம் செய்யும் வனிதா விஜயகுமார்

பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்யவுள்ளார் வனிதா விஜயகுமார்.
தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். 1995-ம் ஆண்டு விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நடித்த படங்கள் யாவும் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்பதால் திரையுலகிலிருந்து விலகினார்.
2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007-ல் விவாகரத்து பெற்றார். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2007-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 2010-ல் முடிவுக்கு வந்தது.
முதல் திருமணத்தின் மூலமாக விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது திருமணத்தின் மூலம் ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். தற்போது இரண்டு மகள்களுடன் வனிதா விஜயகுமார் வாழ்ந்து வருகிறார். அப்பா விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதல் உள்ளிட்டவற்றின் மூலம் ஊடகங்களில் இவருடைய செய்தி அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் வனிதா விஜயகுமார் பிரபலமானார். அங்கும் சில சர்ச்சைகளில் சிக்கினார். இறுதியாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தன் மீதான அனைத்துச் சர்ச்சைகளையும் களைந்தார். தற்போது யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி, தனது சமையல் வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார்.
இதனிடையே இன்று (ஜூன் 17) காலை முதலே வனிதா 3-வது திருமணம் செய்யவுள்ளார் என்று தகவல் பரவியது. பீட்டர் பால் என்பவருடன் திருமணம் என்று திருமணப் பத்திரிகையும் வெளியானது. இது தொடர்பாக விசாரித்த போது, வனிதா விஜயகுமார் 3-வது திருமணம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தினார்கள். ஜூன் 27-ம் தேதி மாலை 4 மணியளவில் பீட்டர் பால் என்பவருடன் வனிதா விஜயகுமாருக்குத் திருமணம் நடைபெறவுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் இந்தத் திருமணம் வீட்டிலேயே நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

Related posts