சினிமாவை விட்டு விலகினேன்” – நடிகை கல்யாணி

பாலியல் தொல்லையால் சினிமாவை விட்டு விலகியதாக நடிகை கல்யாணி தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுடன் ‘அள்ளித்தந்த வானம்‘ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கல்யாணி. ஜெயம்ரவியின் ஜெயம் படத்தில் கதாநாயகி சதாவின் தங்கையாக வந்தார். இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கொரோனா ஊரடங்கில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

‘’சிறிய வயதிலேயே பிரபுதேவா படத்தில் நடித்தது அதிர்ஷ்டம். சின்னத்திரையிலும் நடித்தேன். இப்போது கணவருடன் பெங்களூருவில் வசிக்கிறேன். நான் கதாநாயகியாக உயர்ந்த பிறகும் பெரிய படங்கள் அமையாதது வருத்தம். மீ டூ சம்பவம் எனக்கும் நடந்துள்ளது.

கதாநாயகியாக நடிக்கும்போது எங்கள் அம்மாவுக்கு போன் அழைப்பு வரும், பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் படம். உங்கள் பெண்தான் கதாநாயகி, ஆனால் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அம்மா வேண்டாம் என்று போனை துண்டித்து விடுவார்.

அதற்கு பிறகுதான் அதன் அர்த்தம் என்ன என்று எனக்கு தெரிய வந்தது. படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று நான் முடிவு செய்ததற்கு இதுவும் ஒரு காரணம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கியபோது உயர் பொறுப்பில் இருந்தவர் என்னை இரவில் ‘பப்பு’க்கு அழைத்தார்.

நான் மாலையில் ‘காப்பி ஷாப்’பில் சந்திக்கலாம் என்றேன். பிறகு அந்த தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்கவே இல்லை. இது மிகவும் மோசம். திறமைக்கு இடம் இல்லை.” என்று கல்யாணி கூறினார்.

Related posts