நடிகை வாணிஸ்ரீ மகன் தூக்குப்போட்டு தற்கொலை

நடிகை வாணிஸ்ரீ மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. இவர் வசந்த மாளிகை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் அபிநய வெங்கடேஷ் கார்த்தி (வயது 36). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர் பெங்களூருவில் தங்கியிருந்து அங்கு உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் உள்ள வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் மன உளைச்சலில் அவர் தவித்து வந்தார்.

அவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் கிராமத்தில் சொந்தமாக பங்களா உள்ளது. அங்கு அவரது தந்தை கருணாகரன் மட்டும் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி அபிநய வெங்கடேஷ் கார்த்தி இ-பாஸ் பெற்று காரில் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஆனூர் கிராமத்துக்கு சென்றார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை பங்களாவின் பின்புறம் உள்ள ஓட்டு வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அபிநய வெங்கடேசுக்கு ஏற்கனவே மன உளைச்சல் இருந்ததாகவும், மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும், தற்போது கொரோனா ஊரடங்கால் வெளியில் செல்ல முடியாததால் மன அழுத்தம் அதிகமானதாகவும் தெரியவந்தது. கொரோனா தொற்று பரவும் என்ற பயத்தால் பெங்களூருவில் இருந்து நேராக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க செல்வதை தவிர்த்து நேராக ஆனூர் கிராமத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு இருந்து சென்னைக்கு செல்வதாக முடிவு செய்திருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.

Related posts