மாஸ்டர்’ பணிகள், வெளியீடு: அனிருத் வெளியிட்ட அப்டேட்

‘மாஸ்டர்’ படத்தின் பணிகள் மற்றும் வெளியீடு குறித்து நேரலைப் பேட்டியொன்றில் பேசியுள்ளார் அனிருத்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது ‘மாஸ்டர்’ பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பில் தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். இந்த கரோனா ஊரடங்கில் நேரலைப் பேட்டி கொடுத்துள்ளார். அதில் ‘மாஸ்டர்’ படத்தின் பாடல்கள், பணிகள் குறித்து அனிருத் கூறியிருப்பதாவது:
“லாக்டவுனுக்கு 1-2 நாட்கள் முன்னால் தான் அனைத்துப் பாடல்களும் வெளியாகின. இசை வெளியீட்டுத் தேதி மட்டும் இரண்டு நாட்கள் தள்ளிப் போயிருந்தால், முழு ஊரடங்கு வந்திருக்கும், பாடல்கள் எதுவும் வெளியாகியிருக்காது. இப்போது வெளியாகியிருப்பது நமது அதிர்ஷ்டம்தான். எப்போதும் நாம் நல்லதையே பார்க்க வேண்டும். இப்போது பாடல்களைக் கேட்க இன்னும் நிறைய நேரம் கிடைத்திருக்கிறது. அதனால்தான் டிக் டாக்கில் நிறையப் பேர் பாடல்களை வைத்து வீடியோ செய்கின்றனர்.
படம் பற்றிக் கேட்டீர்களென்றால், ஆம் நாங்கள் ஏப்ரல் 9 வெளியீட்டுக்காக வேலை செய்து தயாராக இருந்தோம். இப்போது ஊரடங்கால் எல்லாம் மாறிப்போனது எல்லோருக்கும் தெரிந்தது. மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும், அப்படித் திறந்தாலும் கூட எந்த அளவில் மக்கள் அரங்குக்கு வருவார்கள் என்பது நமக்குத் தெரியாது, பயம் இருக்கும். சின்ன அப்டேட் சொல்ல வேண்டுமென்றால் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மீண்டும் தொடங்கிவிட்டன. இயக்குநர் லோகேஷும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
என் வீட்டிலேயே இசையமைப்புக்குத் தேவையான கருவிகள் இருப்பதால் நான் பின்னணி இசை வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள். எல்லாம் நன்மைக்கே. படம் என்று வந்தாலும் அன்று சிறப்பாக இருக்கும். அவ்வளவுதான். விஜய் சாரிடமும் பேசினேன். இந்த வேலைகளைச் செய்து வருகிறோம் என்று சொன்னேன். நாங்கள் எல்லோருமே படம் எவ்வளவு சீக்கிரம் வருமோ அவ்வளவு சீக்கிரம் வரட்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்”.
இவ்வாறு அனிருத் தெரிவித்துள்ளார்.

Related posts