வாழ்க்கையை கொரோனா புரிய வைத்துள்ளது: நடிகை சுருதிஹாசன்

வாழ்க்கையை கொரோனா புரிய வைத்துள்ளது என்று நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புக்கு போக முடியாதது வருத்தம்தான். ஆனாலும் உலகே சிக்கலில் இருக்கும்போது இது பெரிய பிரச்சினை இல்லை. சமையல், வீட்டு வேலை, இசை, கவிதைகள் எழுதுதல் என்று நேரத்தை கழிக்கிறேன்.

கொரோனா பலரை வீடுகளில் தனிமைப்படுத்தி இருப்பதுபோல் எனது வாழ்க்கையில் நானும் தனிமைப்படுத்திக்கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. பல தடவை நிறைய பேர் என்னை தவறாக புரிந்தனர். அப்போது தனியாக இருக்க தோன்றியது.

கொரோனாவால் நாலுபேருடன் சேராமல் வீட்டில் இருப்பதை நேர்மறையாக பார்க்கிறேன். இத்தனை நாட்கள் விருந்து, மால்கள், காப்பி ஷாப் என்று எல்லோரும் ஒன்றாக கூடினோம். அப்போது அநாவசியமான விஷயங்கள் பற்றித்தான் பேசினோம்.

வாழ்க்கையில் முக்கியமானது என்ன என்று எல்லோருக்கும் புரிந்து இருக்கிறது. ஊரடங்குக்கு பிறகு நிறைய பேரிடம் நிறைய மாற்றங்கள் தெரியும். எனது காதல் முறிவு பாடம் கற்றுத்தரவில்லை.

அந்த உறவு நல்ல அனுபவத்தை கொடுத்தது. அந்த உறவு முறிந்ததால் வருத்தப்படவில்லை. மீண்டும் காதலில் விழுவேன். நான் எதிர்பார்க்கிற மிகச்சிறந்த அன்பு மீண்டும் கிடைக்க வேண்டும். அந்த அன்பை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

எனது எண்ணங்கள் ஆன்மிக ரீதியாக இருக்கும். கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி நம்மை வழிநடத்துகிறது என்று நம்புகிறேன். நம் மனதில் ஆழமாக ஒரு விஷயத்தை நினைத்தால் அது நடக்கும்”.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Related posts