த.தே. கூட்டமைப்பு உருவானதற்கான காரணத்தையே சுமந்திரன் சீர்குலைத்துவிட்டார்

தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒட்டு மொத்த ஆயுதப் போராட்டத்தையும் தவறு என்று குறிப்பிட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளமை மன்னிக்க முடியாத தவறு என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஆயுதப் போராட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பணிய வைத்து அரசியல் ரீதியாக பேசுவதற்கான ஓர் அங்கீகாரமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு எம் .ஏ.சுமந்திரன் இப்படியான கருத்துக்களை சொல்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவருடைய கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆயுதப் போராட்டத்தில் பொது மக்கள், போராளிகள் ஒட்டு மொத்தமாக உயிரை அர்ப்பணித்து உள்ளார்கள். ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் உலகளாவிய ரீதியில் எங்களுடைய இனப்பிரச்சினை வரலாறாக பதியப்பட்டுள்ளது.

ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் இனப் பிரச்சினை சார்ந்த விடயங்களை இன்றைக்கு இலங்கை அரசாங்கத்துடன் பேசும் ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆகவே இந்த ஆயுதப் போராட்டத்தின் ஊடகத்தான் எங்களுடைய இனப் பிரச்சினை தொடர்பான முக்கிய விடயங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அந்த வகையில் சுமந்திரனது கருத்துக்கு தமிழரசுக் கட்சி எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் இவ்விடயத்தில் நிச்சயமாக ஒரு சரியான முடிவை எடுக்கும்.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்டம் வீறு கொண்டு எழுந்து இந்த அரசாங்கத்தை பணிய வைத்த வரலாறுகள் பல உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமான நோக்கத்தை தனது கருத்து ஊடாக சுமந்திரன் சீர் குலைத்துள்ளார் என்றார்.

மன்னார் குறூப் நிருபர்

Related posts