இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 195 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1568 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 12727 – ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 27.41 சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 14 ஆயிரத்து 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் 5,804 பேரும், டெல்லியில் 4,898- பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

—–

கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள சென்னையில் இதுவரை 1,458 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையிலேயே அதிகபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 324 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக இராயபுரம் மண்டலத்தில் 275 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 199 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டையில் 166 பேர், அண்ணா நகரில் 130 பேர், தண்டையார்ப்பேட்டையில் 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,210 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 226 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 68 பேரும், திருவிகநகர் மண்டலத்தில் 34 பேரும் குணமடைந்துள்ளனர். இதுவரை சென்னையில் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்கியுள்ளன.

அந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டன. இதையடுத்து சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.அதே சமயம் இருசக்கரவாகனங்களில் ஒருவருக்கு மேல் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

தியாகராய நகரில் அனைத்து சிக்னல்களும் வழக்கம் போல் செயல்படத் துவங்கியுள்ள நிலையில், போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனியாக அமைந்துள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன

Related posts