கொரோனா ஊரடங்கில் நிலத்தை உழுத நடிகை

நடிகை கீர்த்தி பாண்டியன் டிராக்டர் ஓட்டியபடி சென்று நிலத்தில் உழுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
கொரோனா ஊரடங்கில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால், நடிகர்-நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். உடற்பயிற்சி, யோகா, தியானம், புத்தகம் படித்தல், நடனம், சமையல், துணி துவைத்தல், வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடுதல் என்று நேரத்தை கழிக்கிறார்கள். இன்னும் சிலர் பண்ணை வீடுகளுக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியன் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கீர்த்தி பாண்டியன் டிராக்டர் ஓட்டியபடி சென்று நிலத்தில் உழுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

“கொரோனா விடுமுறையில் சொந்த நிலத்தில் உழுவதற்காக வந்து விட்டேன். இது சுற்றிலும் வேலிகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட இடம். பொது இடம் அல்ல.

சொந்த நிலத்தில் உழுவது ஊரடங்கை மீறுவது போன்று ஆகாது நாங்கள் ஊரடங்கை மதிக்கிறோம்” என்றும் பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அடுத்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தந்தை அருண் பாண்டியனுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

Related posts