முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம்

சென்னையில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு காவல்துறை ரூ.500 அபராதம் விதித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்களை காத்து கொள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் முக கவசம் கட்டாயம் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

சென்னையிலும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தொற்றுநோய் சட்டம், பொதுசுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் உத்தரவிடப்பட்டு உள்ளது. வெளியே பொதுமக்கள் எவ்வளவு நேரம் நடமாடுகிறார்களோ? அதுவரையில் முக கவசம் அணிய வேண்டும்.

இந்த உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் வெளியே சென்றால், அவர்கள் வெளியில் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மாதங்கள் வைக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதனையும் மீறி வாகன ஓட்டிகள் சிலர் செல்கின்றனர். இதனால் சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்படும். தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 179வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் காவல் துறை அறிவித்து உள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது.

முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது. நடந்து சென்றாலும், வாகனங்களில் சென்றாலும் முக கவசம் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை அறிவித்து உள்ளது.

Related posts