மனைவியைப் பிரிந்ததற்கு அமலா பாலும் ஜுவாலா கட்டாவும் தான் காரணமா?

தனது மனைவியைப் பிரிந்ததற்கு அமலா பாலும் ஜுவாலா கட்டாவும் தான் காரணமா என்பதற்கு நடிகர் விஷ்ணு விஷால் பதில் அளித்துள்ளார்.

2011 டிசம்பரில் நடிகர் கே. நட்ராஜின் மகளான ரஜினியைக் காதலித்துத் திருமணம் செய்தார் நடிகர் விஷ்ணு விஷால். 2017-ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 2018 நவம்பரில் மனைவி ரஜினியை விவாகரத்து செய்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்தார்.

ஜுவாலா கட்டா, பாட்மிண்டன் வீரர் சேதன் ஆனந்தைத் திருமணம் செய்து, 2011-ல் விவாகரத்து செய்தார்.

கடந்த வருட ஜூன் மாதம், ஜுவாலா கட்டாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்தார் விஷ்ணு விஷால். இதனால் இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. பிறகு, புத்தாண்டையொட்டி விஷ்ணு விஷாலும் ஜுவாலா கட்டாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டன. இதன்மூலம் இவ்விருவரும் தங்கள் காதலை வெளியுலகுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் மற்றொரு புகைப்படத்தைச் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார்கள். கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜுவாலா கட்டா, விஷ்ணு விஷாலை நினைத்து உருக்கமாக இன்ஸ்டகிராமில் பதிவு எழுதினார்.

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விஷ்ணு விஷால் கூறியதாவது:

மனைவியை விட்டுப் பிரிந்த பிறகு ஜுவாலா கட்டாவைச் சந்தித்தேன். அவருடைய நிறைய நேரம் செலவழிக்க ஆரம்பித்தேன். நேர்மறை எண்ணங்கள் கொண்டவர் என்பதால் அவரை எனக்குப் பிடிக்கும். அவரும் தன் மண வாழ்க்கையில் பிரிவைச் சந்தித்துள்ளார். நாங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசியுள்ளோம். இந்த உறவு நல்லமுறையில் சென்றுகொண்டிருக்கிறது. வருங்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

ஜுவாலா கட்டாவினால் தான் என் மனைவியைப் பிரிந்ததாக சிலர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கிறார்கள். ராட்சசன் படத்தின் படப்பிடிப்பின்போது அமலா பாலைக் காதலித்ததாகக் கூறுகிறார்கள். மனைவியைப் பிரிந்ததற்கான காரணத்தைக் கூறி அவர்களுடைய விமரிசனங்களைத் தவறாக்க எண்ணவில்லை. ஏனெனில் அது என் சொந்த வாழ்க்கை என்று கூறியுள்ளார்.

Related posts