தொழில் அதிபருடன் திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்

நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழில் இது என்ன மாயம், ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சர்கார், சண்டகோழி-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘குயின்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேசுக்கு தொழில் அதிபருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது என்றும், அவர் கேரளாவைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி பிரமுகரின் மகன் என்றும் இணையதளங்களில் தகவல் பரவியது.

இதற்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மை அல்ல. இது எப்படி பரவியது என்று ஆச்சரியமாக உள்ளது. திருமணம் பற்றிய எண்ணம் எதுவும் இப்போது இல்லை. எனது சொந்த வாழ்க்கை பற்றி இதுபோன்ற அபத்தமான தகவலை பரப்ப வேண்டாம். நாட்டில் முக்கியமான வேறு பிரச்சினைகள் உள்ளன. எனது திருமணம் பற்றிய வதந்தியை விட கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். சமூக விலகலை கடைப்பிடியுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.” இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

Related posts