இலங்கை ஊடகங்களில் வெளியான இன்றைய முக்கிய செய்திகள் 07.04.2020

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகம் சேர்ச் லேனில் நேற்று மாலை இடம்பெற்றது.

ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவரது நண்பர்களால் இணைந்து மல்லாகத்தில் உள்ள வீடொன்றில் இன்று நடத்தப்பட்டது. அதுதொடர்பில் தகவல் கிடைத்து அந்த வீட்டை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்.

அதன்போதே 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வினோதன் உள்ளிட்ட கொண்டாட்டத்தில் பங்கேற்ற பலர் இராணுவத்தினரின் வருகையறிந்து அங்கிருந்து தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், ஊரடங்கு வேளையில் பொலிஸ் அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக கூட்டம் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

——-

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கினார்.

கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஏனைய நாடுகளையும் விஞ்சும் வகையில் மக்களின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை பேணிய வகையில் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முடியுமானது. சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச மற்றும் தனியார் பொறிமுறைகளுடன் நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் எப்போதும் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள், அவர்களுடன் பழகியவர்களை இனம்கண்டு வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தொற்றுக்குள்ளானவர்களை ஏலவே அறிந்துகொள்வதற்கு முடியுமாக இருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

40 மத்திய நிலையங்களில் நோய்த்தடுப்புக்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நோயாளிகள் இனம்காணப்பட்ட பிரதேசங்களில் பொதுச் சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை கண்காணித்தல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஜக்கிய மக்கள் சக்தியினர் தமது பாராட்டுக்களை தெரிவித்ததுடன், அரசியல் மற்றும் வேறு பேதங்களின்றி நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் எவருக்கேனும் அநீதிகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டிருக்குமானால் அது தொடர்பில் உடனடியாக செயற்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாளாந்த சம்பள அடிப்படையில் நிர்மாணத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்வதற்காக வருகை தந்து கிராமங்களுக்கு செல்ல முடியாதிருக்கின்றவர்களுக்கு குறித்த தொழில் வழங்குனர்களுக்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கேட்டுக்கொண்டனர்.

தொற்றாத நோய்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்கு தேவையான பல்வேறு மருந்துப் பொருட்கள் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்தியாவிலிருந்து நாளை (07) நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

முழு உலகமும் முகம்கொடுத்துள்ள பொருளாதார, சமூக நிலைமைகளை கருத்திற் கொண்டு எமது நாட்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைமையொன்று தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விளக்கினார். வீழ்ச்சியடைந்துள்ள ஆடை மற்றும் சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவது சம்பந்தமாக நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அவர்களின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் செற்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சமூர்த்தி உதவி பெறுபவர்களுக்கு மேலதிகமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட 7 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு எவ்வித பேதமுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கேனும் அது கிடைக்காவிடின் கிராம சேவகரின் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுகாதார மற்றும் பல்வேறு துறைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கமும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் கவனம் செலுத்தினர்.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி அதன் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

——

கொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவகம், நக்டா எனப்படும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிடம் உள்ள பி.சி.ஆர் உபகரணங்களை கொரோனா தொற்று நோயை பரிசோதிப்பதற்கு சுகாதார துறையினருக்கு உடனடியாக வழங்குமாறு குறித்த இரண்டு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள புத்தளம் கல்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள நாரா நிறுவனத்தின அலுவலகம் மற்றும் விடுதிகளையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களென சந்தேகிக்கப்படுபவர்களை தங்கவைப்பதற்கான தனிமைப்படுத்தும் மையம் அமைப்பதற்காக தற்காலிகமாக வழங்குமாறும் குறித்த நிறுவனத்தின் தலைவர் நவரட்ணராஜாவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் கொரோனா தொற்றினை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பி.சி.ஆர். உபகரணங்கள் தேவை அதிகரித்துள்ளமையினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts