கீர்த்தி சுரேஷ் தொழிலதிபரைத் திருமணம் செய்யவுள்ளார் என்று வெளியான செய்திக்கு அவருடைய தரப்பு மறுப்பு தெரிவித்தது.
மலையாளத்தில் நாயகியாக அறிமுகமானாலும், ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதற்குப் பிறகு விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வரத் தொடங்கினார்.
தெலுங்கில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட ‘மஹாநடி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். அவருடைய நடிப்புக்குப் பாராட்டுக்கள் குவிந்தது மட்டுமன்றி தேசிய விருதையும் வென்றார். தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நேற்று (மார்ச் 2) முதல் சமூக வலைதளங்களில் கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம் என்று தகவல் பரவியது. தொழிலபதிர் ஒருவரை கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளையாகப் பார்த்திருப்பதாகவும், அதற்கு கீர்த்தியும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் விசாரித்தபோது, “இந்தச் செய்தியில் உண்மையில்லை. அடுத்த வருடம் இறுதிவரை அவருடைய கால்ஷீட் தேதிகள் ஃபுல். பல்வேறு மொழிப் படங்களில் நடிக்கத் தேதிகள் கொடுத்துவிட்டார். அப்படியிருக்கும் போது எப்படி இப்படியெல்லாம் செய்திகள் வெளியாகிறது எனத் தெரியவில்லை” என்றனர்.