தனித்தனி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் கமல் குடும்பம்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கமல் குடும்பத்தினர் அவரவர் வசிக்கும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக நடிகை ஷ்ருதி கூறியுள்ளார்.

ஷ்ருதியும் அவருடைய தாய் சரிகாவும் மும்பையில் தனித்தனி அபார்ட்மெண்ட்களில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்கள். அதேபோல சென்னையில் கமலும் அவர் மகள் அக்‌ஷராவும் தனித்தனி வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்கள்.

இதுபற்றி ஒரு பேட்டியில் ஷ்ருதி கூறியதாவது:

கடந்த சில நாள்களாக கரோனாவின் தீவிரத்தை மக்கள் உணர்ந்துள்ளார்கள். நல்லவேளையாக, நான் திரும்ப வரும்போது படப்பிடிப்புகள் ரத்தாகியிருந்தன. என்னுடைய மொத்தக் குடும்பமும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். என்னுடைய அம்மா இன்னொரு அபார்ட்மெண்டில் உள்ளார். சென்னையில் அப்பா கமலும் தங்கை அக்‌ஷராவும் தனித்தனி வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். எல்லோருக்கும் விதவிதமான பயண அட்டவணைகள். எனவே அனைவரும் ஒன்றாக இச்சமயத்தில் இருப்பது சரியாக இருக்காது. இதுபோன்ற முடிவைத்தான் மக்களும் எடுக்கவேண்டும் என்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஷ்ருதி கூறியுள்ளார்.

கரோனா வைரஸால் உலகம் முழுக்க 16,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா்.

Related posts