புதிய படத்துக்கு தயாராகும் விஜய்

விஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி மாஸ்டர் திரைக்கு வரும்.

அடுத்து விஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது.

இயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது. விக்ரமை வைத்து ‘கோப்ரா’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து பெயரும் அடிபட்டது.

இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்கள் வந்து வசூல் குவித்தன. துப்பாக்கி 2-ம் பாகத்தை எடுப்பேன் என்று முருகதாஸ் ஏற்கனவே கூறி வந்தார். எனவே விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

——

`பேட்டை’ படத்தில் சசிகுமார் ஜோடியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், மாளவிகா மோகனன். இப்போது `மாஸ்டர்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

மாளவிகா மோகனனுக்கு தமிழ் தெரியாது. அதனால், `டியூசன்’ மூலம் தமிழ் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி, முன்னாள் நிருபராக இருந்த ஒரு பெண்ணை தனது தமிழ் ஆசிரியையாக மாளவிகா மோகனன் நியமித்து இருக்கிறார். அவர் எங்கே சென்றாலும், அந்த ஆசிரியையை உடன் அழைத்து செல்கிறார்!

——

விஜய் நடித்த `மாஸ்டர்’ படம், அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதே தேதியில், `வேட்டை நாய்’ என்ற சிறு பட்ஜெட் படமும் திரைக்கு வருகிறது.

`வேட்டை நாய்’ படத்தில் ஆர்.கே.சுரேஷ்-ராம்கி ஆகிய இருவரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு விஜய் நடித்த `சர்க்கார்’ படத்துடன், ஆர்.கே.சுரேஷ் நடித்த `பில்லா பாண்டி’ படம் மோதியது குறிப்பிடத்தக்கது.

`வேட்டை நாய்’ படத்தை இயக்கியிருக்கும் எஸ்.ஜெய்சங்கர் ஏற்கனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி, `மன்னாரு’ படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். அந்த படத்தை மறைந்த டைரக்டர் பாலுமகேந்திரா பாராட்டி இருந்தார்.

`வேட்டை நாய்’ படத்தின் கதாநாயகன் ஆர்.கே.சுரேசுக்கு ஜோடியாக சுபிக்‌ஷா நடித்து இருக்கிறார். இவர், `கடுகு’ படத்தில் நடித்தவர். படத்தை பற்றி டைரக்டர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது:-

“இந்த படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன். ஆனால், அடிப்படையில் நல்லவன். அப்படிப்பட்டவனை ஒரு பெண் உணர வைக்கிறாள். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களே கதை.

பொதுவாகவே பெரிய நட்சத்திர கதாநாயகர்கள் நடித்த படம் வரும்போது, சிறு பட்ஜெட் படங்களை வெளியிட தயங்குவார்கள். ஆனால் படத்தின் மீது உள்ள நம்பிக்கையில், `வேட்டை நாய்’ படத்தை `மாஸ்டர்’ படத்துடன் களத்தில் இறக்குகிறோம்.”

Related posts