கொரோனாவால், ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்து?

தர்பார் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சிவா டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்துள்ளனர்.

குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் இதில் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் ஆகியோரும் உள்ளனர்.

இது ரஜினிக்கு 168-வது படம். கிராமத்து பின்னணியில் குடும்பப் பாங்கான கதையம்சத்தில் தயாராகிறது. ரஜினிகாந்த் 2 பெண்டாட்டிக்காரராக நடிக்கிறார் என்றும், மனைவிகளாக குஷ்புவும், மீனாவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் கசிந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும், நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இரண்டு கட்ட படப்பிடிப்புகளை அங்கு முடித்துள்ளனர். அடுத்தகட்ட படப்பிடிப்பை கொல்கத்தா, புனே உள்ளிட்ட வடமாநில நகரங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வடமாநில படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடிவுசெய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முழு படப்பிடிப்பையும் அங்கேயே முடித்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதற்காக ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

Related posts