இன்றைய முக்கிய இலங்கை செய்திகள் 02.03.2020 திங்கள் காலை

ஆட்சியாளர்கள் 72 வருட காலத்திற்குள் நாட்டில் அனைத்தையும் அழிவுக்கு உட்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற காலம் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முடிவுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இன்றில் இருந்து ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் மாத்திரம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

——–

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (02) மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் மாநகர சபையின் செயற்பாடுகள், நகரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வினவினார்.

அதற்கு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பிலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு வரும் மாநகர சபை கட்டட பணிகள் தொடர்பிலும் ஏனைய நகர அபிவிருத்திகள் தொடர்பிலும் முதல்வர் விளக்கியுள்ளார்.

——-

பாராளுமன்றம் இன்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்படுமானால் 68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும்.

5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது.

அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 36 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது.

அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்றைய தினம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

அதன்படி நேற்று (01) நள்ளிரவு பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைந்துள்ள நிலையில் எந்த வேளையிலும் பாராளுமன்றத்தை கலைக்கும் இயலுமை ஜனாதிபதிக்கு உள்ளது.

———-

Related posts