படத்துக்கு டப்பிங் பேச மறுப்பு நடிகர் யோகிபாபு மீது புகார்

நடிகர் யோகிபாபு படத்துக்கு டப்பிங் பேச மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது 15-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பெரிய கதாநாயகர்களே யோகிபாபு கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் அவர் நடித்துள்ள ‘மணி’ என்ற படத்துக்கு டப்பிங் பேச மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த படத்தை கிஷோர் இயக்கி தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்தன.

ஆனால் யோகிபாபு டப்பிங் பேச மறுத்து விட்டதாகவும், இதனால் படம் ஒன்றரை வருடங்களாக முடங்கி இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் கே. ராஜன் கூறும்போது “யோகிபாபு மணி படத்துக்கு டப்பிங் பேசாமல் இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது. அந்த படத்துக்கு அவர் டப்பிங் பேச வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் மணி படத்துக்கு டப்பிங் பேச யோகிபாபு சம்மதித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அரண்மனை-3 படப்பிடிப்புக்காக வெளியூரில் இருக்கும் அவர் அடுத்த மாதம் 9-ந்தேதி சென்னை திரும்ப இருப்பதாகவும், அப்போது டப்பிங்கை முடித்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related posts