சீனப்பெண் சுகமடைந்து வெளியேறினார்..!

கொவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டு கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணமடைந்து இன்று (19) முற்பகல் வைத்தியசாலையில் இருந்து சுகமடைந்து வெளியேறினார்..!

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அங்கொட IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சீன பெண் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில் இன்று (19) முற்பகல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், குறித்த சீன பெண் இன்று சீனா நோக்கி செல்லவுள்ள நிலையில், இந்நாட்டு சீன தூதரக அதிகாரிகளால் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி குறித்த பெண் அங்கொட IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சுற்றுலாப்பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்த 40 வயதுடைய குறித்த பெண் சுமார் 20 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணம் நிறைவடைந்து கடந்த 25 ஆம் திகதி சீனா நோக்கி புறப்பட்டுச் செல்லவிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது, அவருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.

சுமார் 10 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த குறித்த பெண் மேலும் சில நாட்களுக்கு வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டிந்தார்.

அவரின் உடலில் இருந்து முழுவதுமாக வைரஸ் நீங்கி விட்டதா என்பது தொடர்பில் உறுதிப்படுத்துவற்காக அவர் இவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று முற்பகல் குறித்த பெண் IDH வைத்தியசாலையில் இருந்து வௌியேறியமை குறிப்பிடத்தக்கது.

Related posts