கொரோனா வைரஸ் இனி கோவிட்-19 என அழைக்கப்படும்

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது என தகவல்கள் வெளியாகின. எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய தகவலின் படி கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 113 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் அவசர கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவி வருவது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு கோவிட்-19 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கூறும்போது, கொரோனா வைரசிற்கு கோவிட்-19 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை. சி ஓ வி ஐ டீ என்ற இந்தப் பெயரில் சி ஓ என்பது கொரோனா என்ற வார்த்தையையும், வி ஐ என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், டீ என்பது டிசீஸ் எனப்படும் நோய் என்ற வார்த்தையையும் குறிப்பதாகவும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா சார்ஸ் வகை வைரஸ் குடும்பத்தை சார்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், அதன் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts