எனது மனைவி இந்து… நான் முஸ்லிம்… எனது குழந்தைகள் இந்தியர்கள்

எனது மனைவி இந்து, நான் முஸ்லிம், எனது குழந்தைகள் இந்தியர்கள் என்ற நடிகர் ஷாருக்கானின் பேச்சு வரவேற்பை பெற்றுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி, தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மனம்திறந்து பேசியுள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அவரின் பேச்சு இணையப் பக்கங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் ஷாருக்கான் பேசும்போது கூறியதாவது:-

நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன், என் மனைவி இந்து மதத்தைச் சேர்ந்தவள், என் பிள்ளைகள் இந்தியர்கள். எங்களுக்கு மதம் கிடையாது. நாங்கள் வீட்டில் இருக்கும் சமயத்தில் பிள்ளைகளிடம் மதம் குறித்து பேசுவதில்லை.

எனது குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபோது மதம் பற்றி எழுதச் சொன்னார்கள். எனது மகள் ஒரு நாள் வந்து, நம்முடைய மதம் என்ன அப்பா என்று கேட்டார். நான் எனது மகளின் விண்ணப்பத்தில் இந்தியன் என்று எழுதினேன் என கூறினார்.

ஷாருக்கான் இப்படி பேசுவது இது முதல் முறையல்ல… கடந்த 2015-ம் ஆண்டு, நாட்டில் நிலவும் மதரீதியான சகிப்புத்தன்மை கவலையளிப்பதாக ஷாருக்கான் கூறிய போது, அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பெண் சாமியார் சாத்வி பிராச்சி, ஷாருக்கானை நாடு கடத்த வேண்டும் என்று கூறினார். பாகிஸ்தானின் ஏஜெண்ட் ஷாருக்கான் என்றும் அவருக்கு வழங்கியுள்ள விருதுகளை அவர் திருப்பியளிக்க வேண்டும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதே நேரத்தில், இந்தியா மதச்சார்பின்மை கொண்ட நாடு என்ற அடையாளத்தை இழந்து, இந்து தேசமாக மாறி வருவதாக ஷாருக்கானுக்கு ஆதரவான குரல்களும் எழவே செய்தன.

5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் ஷாருக்கான் அதே கருத்தைத் தான் முன் வைத்துள்ளார். உண்மையில் இந்த கருத்து அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பொது வெளியிலும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. சாதி, மதம் என பிரித்து பேசுபவர்களுக்கு மத்தியில் மனிதத்தால் அனைவரும் ஒன்று என்பதையே ஷாருக்கான் முன்வைத்துள்ளார்.

Related posts