அயோத்தியில் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச் சடங்குகள்

உத்திரபிரதேசத்தில் சுமார் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்த முகம்மது ஷெரீப்பிற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. அயோத்திவாசியான இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் இச்சமூகப்பணியை செய்து வருகிறார்.

அயோத்திவாசிகளால் ‘ஷெரீப் சாச்சா’ என அன்புடன் அழைக்கப்படுபவர் முகம்மது ஷெரீப்(80). சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்து பிழைக்கும் இவர் அயோத்தி அமைந்துள்ள உ.பி.யின் அவத் பகுதி முழுவதிலும் அறிமுகமானவர்.

இதற்கு அவர் கடந்த 27 வருடங்களாக அடையாளம் தெரியாமலும், ஆதரவில்லாமலும் உயிரிழப்பவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்வது காரணம். இதை ஷெரீப் தனது செலவில் செய்து வருவதன் பின்னணியில் அவரது குடும்ப வாழ்க்கையில் நடந்த சோகம் உள்ளது.

கடந்த 1993 இல் அருகிலுள்ள சுல்தான்பூருக்கு ஒரு பணியாக செய்ன்ற ஷெரீப்பின் இளையமகன் முகம்மது ரெய்ஸ் வீடுதிரும்பவில்லை. காவல்துறையில் புகார் அளித்து பல மாதங்கள் தேடியும் கிடைக்கவில்லை.

பிறகு ரெய்ஸின் உடல் அனாதைப் பிணமாகக் கருதி அடக்கம் செய்யப்பட்டு விட்டது. இந்த தகவல் காவல்துறையால் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட சட்டையின் தையல்காரரின் அடையாளத்தால் அவர் ரெய்ஸ் என்பது தாமதமாகத் தெரிந்தது.

இதையடுத்து இனி தன் மகனை போல் ஆதரவற்றதாகக் கருதப்பட்டு இறந்த உடல்களுக்கு தாம் இறுதிச்சடங்குகள் செய்வது என ஷெரீப் உறுதி பூண்டுள்ளார். இதில், இந்து, முஸ்லிம், சீக்கியர் மற்றும் கிறித்தவர் உள்ளிட்ட ஜாதிமத பேதமின்றி இப்புனிதப் பணியை ஷெரீப் செய்து வருகிறார்.

உ.பி.யின் தெய்வீக நகரமாக அயோத்தியில் ஆதரவற்று இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே, 1993 இல் இருந்து ஷெரீப் சுமார் 25,000 உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

ஷெரீப்பை பணியை முதன்முறையாக அடையாளம் கண்ட உ.பி. மாநில அரசு அவரது பெயரை குடியரசு தலைவர் விருதிற்குப் பரிந்துரைத்துள்ளது. இதை ஏற்று மத்திய அரசு ஷெரீப்பை பாராட்டி இன்று குடியரசு தலைவரால் பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுகிறது.

Related posts