காணாமல் போனோர் விவகாரம் – ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு!

காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை வடக்கு, கிழக்கு இணைந்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் கண்டித்துள்ளார்.

வவுனியாவில் 1065 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (19) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறிய கருத்துக்கு நாம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

காணாமற் போனவர்கள் இல்லை என்று சொல்வது நாம் எதிர்பார்த்தது தான். தமிழ் மக்களின் வாக்குகளுடன் வந்த அரசாங்கமும் அதனையே சொன்னது. சிங்கள மக்களின் ஆதரவுடன் வந்த அரசாங்கமும் அதனையே சொல்லியிருக்கிறது. வெளிநாடுகள் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

அண்மையில் பல்கலைகழக மாணவர்களால் பொங்கு தமிழ் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது. அந்த நிகழ்வை எதிர்வரும் காலத்தில் பெருமளவில் செய்வதாக கூறியிருக்கிறார்கள். அதனை விட நாம் தமிழ் மக்களுக்கான தீர்வை எப்படிப் பெறப்போகின்றோம். என்ன வழியில் பெறப் போகின்றோம் என்பதைத் தான் இந்த அரசியல் தலைமைகள் மற்றும் கல்விச் சமூகமும் கூற வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கிறது.

எனவே, நாம் அனைவரும் ஒருமித்த குரலுடன் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை அழைப்பதன் ஊடாகத் தான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

-வவுனியா தீபன்-

Related posts