தர்பார் ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ அனுமதி ?

ரஜினிகாந்தின் தர்பார் வெளியாகும் திரையரங்கின் முன்பு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ அனுமதி கேட்டு போலீசாரிடம் ஒரு ரசிகர் மனு அளித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். ரஜினியின் 167-வது படமான தர்பாரில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் வரும் 9-ம் தேதி தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது.

சேலம் மாவட்டத்தின் மெய்யனூர் கிராமத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ். திரையரங்கில் தர்பார் படம் வெளியாகும் தினத்தன்று, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ கனகராஜ் என்பவர் அனுமதி கோரியுள்ளார். பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ஹெலிகாப்டரிலிருந்து திரையரங்கின் முன்பு மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, குறிப்பிட்ட இடத்தை மேற்பார்வை செய்து விரிவான அறிக்கை அனுப்புமாறு சேலம் வருவாய் கோட்டாட்சியர், சேலம் மேற்கு வட்டாட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Related posts