குடியுரிமை திருத்த எதிர் சட்டம்- சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை..?

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாநில சட்டசபையில் நேற்று முன்தினம் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தீர்மானத்தை கொண்டு வந்தார். குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

பினராயி விஜயன் கொண்டு வந்த இந்த தீர்மானம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. பா.ஜனதாவின் ஒரே உறுப்பினரான ராஜகோபால் மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்து பேசினார்.

இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்று இருக்கிறது.

கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். குடியுரிமை தொடர்பான எந்த சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது எனவும், கேரள சட்டசபை உள்ளிட்ட எந்த மாநில சட்டசபைக்கும் அந்த அதிகாரம் இல்லை எனவும் அவர் கூறினார். மேலும் இது தொடர்பாக கேரள இடதுசாரி அரசும், பினராயி விஜயனும் சிறந்த சட்ட ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதைப்போல குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்காக பினராயி விஜயனுக்கு எதிராக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பா.ஜனதா எம்.பி. நரசிம்ம ராவ் புகார் அளித்து உள்ளார்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்-மந்திரி பினராயி விஜயனிடம், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தின் கருத்துகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்த அவர்

மாநில சட்டசபைகளுக்கு என சிறப்பு உரிமைகள் உள்ளன. அதன்மூலம் இதுபோன்ற (குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான) தீர்மானங்கள் நிறைவேற்ற முடியும். இதுபோன்ற நடவடிக்கைகள் எங்கேயும் கேட்டதில்லை. ஆனால் நாட்டின் தற்போதைய சூழலில் எந்த வாய்ப்பையும் நாம் புறந்தள்ள முடியாது. ஏனெனில் முன்னெப்போதும் இல்லாத சம்பவங்கள் நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

இந்நிலையில், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேரள அரசு சிஏஏ சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகவும், அதை ரத்து செய்யவும் கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை. ஏனென்றால், குடியுரிமை என்பது மத்திய அரசின் பட்டியலில் இருக்கிறது. இதில் மாநில அரசு செயல்படுவதற்கு எந்தவிதமான முகாந்திரமும், பங்கும் இல்லை.

கேரள மாநிலத்துக்குத் தொடர்பில்லாத இதுபோன்ற விஷயங்களில் எதற்காக இந்த அரசியல் கட்சிகள் ஈடுபடுகிறார்கள். இந்தியப்பிரிவினையின் போது, தென் மாநிலமான கேரளா எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை, சட்டவிரோத குடியேறிகள் யாரும் வராதபோது கேரள மாநிலத்துக்குத் தொடர்பில்லாத விஷயம்.

கண்ணூரில் 80-வது இந்திய வரலாற்று மாநாட்டில் நான் பங்கேற்று சிஏஏ குறித்துப் பேசியபோது, எனக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்திய வரலாற்று மாநாடு சில பரிந்துரைகளை மாநில அரசுக்கு வைத்திருந்தது. அதில் மத்திய அரசுக்கு இணங்கிச் செல்லாதீர்கள் என்று கூறியிருந்தது. அதுபோன்ற பரிந்துரைகள் ஒட்டுமொத்தமாகச் சட்டவிரோதம், கிரிமினல் உள்நோக்கம் கொண்டது.

இவ்வாறு ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் தெரிவித்தார்.

Related posts