அரசியல் யாப்பின் மூலம் தீர்வையடைவதே நோக்கம்

சுயமரியாதையுடனும் தன்மானத்துடனும் தமிழர்கள் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்கக் கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வை அரசியல் யாப்பொன்றின் மூலமாக அடைவதே எமது நோக்கமாகும். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தினார். இலங்கை, மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டேபில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இச் சந்திப்பில் சம்மந்தன் மேலும் கூறியதாவது, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள் அங்கீகரித்திருந்தமையை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருந்தன. தேசியப் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வுகாண வேண்டியதுடன் மக்கள் சுயமரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்கக் கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வை அரசியல் யாப்பொன்றின் மூலாமாக அடைவதே எமது நோக்கமாகும்.

மேலும் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்தராஜபக்ஷ, 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவோம். எச் சந்தர்ப்பத்திலும் எமது மக்களின் அபிலாசைகளையோ உரிமைகளையோ நாம் விட்டுக்கொடுக்கவோ அவற்றிக்குமாறாகவோ செயற்படமாட்டோம். இனங்களுக்கிடையே சமாதானமும் நாட்டிலே ஸ்திரத்தன்மையும் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்துகொள்வது மிக கடினமாகும். ஜனநாயக பண்புகளுக்கு விரோதமான எந்தவொரு திருத்தங்களுக்கும் நாம் ஆதரவளிக்கப் போவதில்லை.

Related posts