ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் நடிக்க தயார் – தமன்னா

திருச்சியில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: சினிமாத்துறையில் நீங்கள் ்நிலைத்து நிற்க காரணம் என்ன?

பதில்: 13 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருந்து வருகிறேன். இந்த ஆண்டு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான ஆண்டு என்றே கருதுகிறேன். நான் கதாநாயகியாக நடித்த கண்ணே கலைமானே, சைரா, ஆக்‌‌ஷன், பெட்ரோமாக்ஸ் உள்ளிட்ட 7 படங்கள் வெளியாகி உள்ளது. அவற்றில் தெலுங்கில் ஒரு படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. புதுப்புது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதாலும், தொடர்ந்து ரசிகர்கள் எனக்கு தரும் ஆதரவும் தான் என்னை நிலைத்து நிற்க செய்துள்ளது.

கேள்வி: உங்களுக்கு போட்டியாக புதுமுக நடிகைகள் வருவது பற்றி?

பதில்: நான் எப்போதுமே யாரையும் போட்டியாக நினைத்தது கிடையாது. புது முகங்கள் சினிமாத்துறைக்கு வருவது நல்லதுதானே. தொடர்ந்து நான் சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்கிறேன். அதுவும் நல்ல கதையம்சம் கொண்ட தரமான புதுப்புது ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்.

ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் நடிக்க தயார்

கேள்வி: ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறீர்கள். அவர்களுடன் நடிக்க தயாராக உள்ளீர்களா?

பதில்: அவர்களது படங்களை நான் ஒரு ரசிகையாக ரசித்து பார்த்திருக்கிறேன். இருவரையும் நான் சின்ன வயதில் இருந்து கடவுள் மாதிரி பார்த்து வருகிறேன். எனவே, அவர்களுடன் நடிக்க யார்தான் மாட்டேன் என்பார்கள். ரஜினி, கமலுக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருந்தால் நிச்சயம் இருவருடனும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

கேள்வி: ரஜினி, கமல் போல உங்களுக்கும் அரசியலில் இறங்கும் ஆசை உள்ளதா?

பதில்: அரசியலுக்கு வருவதென்றால் அதற்கு வேறுமாதிரியான பொறுப்பு வேண்டும். அது என்னால் முடியாது. நம்மால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என இருவரும் விருப்பப்பட்டு அரசியல் பாதைக்கு வந்துள்ளனர். மேலும் அவர்களை பற்றி மக்களிடம் நல்ல எண்ணங்கள் இருந்து கொண்டே உள்ளது. எனவே, அவர்கள் இருவரும் மக்களுக்கு நல்ல சேவை செய்வார்கள் என நம்புகிறேன்.

திருமணம் எப்போது?

கேள்வி: உங்கள் திருமணம் எப்போது? தமிழ்நாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்: (சிரித்து கொண்டே) நல்ல பையன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன். நீங்களே (நிருபர்களை பார்த்து) நல்ல பையனை தேடிக்கொடுத்தால் நான் ரெடி.

கேள்வி: பாகுபலி, சைரா, ஆக்‌‌ஷன் போன்ற படங்களில் கதாநாயகியாக ஆக்‌‌ஷன் பாத்திரங்களையே தேர்வு செய்தது ஏன்?

பதில்: எனது கதாபாத்திரம் அப்படி அமைந்து விட்டது. அதை நான் மாற்ற முடியாது. நடிப்பது மட்டும்தான் என் வேலை. பொதுவாக நடிகைகளுக்கு ஆக்‌‌ஷன் கதாபாத்திரம் கொடுப்பதில்லை. இது நல்ல மாற்றம்தானே.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts