விஜய் அரசியல் நுழைவை சூசகமாக குறிப்பிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்

“ஆண்டது போதுமென நினைத்த பிறகு, தம்பிகளுக்கு வழிவிடுங்கள்” என விஜய் அரசியல் நுழைவை மறைமுகமாக எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி உள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. இதில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

விழாவில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும்போது கூறியதாவது:-

சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்று சிலர் சொல்வதாகவும், ஆனால் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்ததாகவும் குறிப்பிட்டார். கமல் துணிச்சலோடு அரசியலில் இறங்கி விட்டார், இது சாதாரண விஷயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என கோடான கோடி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருப்பதாக குறிப்பிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், கமலும் ரஜினியும் சேர்ந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழர்களுக்கு நல்லது என்றார்.

அரசியலில் பின்னால் குத்துபவர்கள் அதிகம் இருப்பதாக குறிப்பிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், தங்கள் பின்னால் இருந்து தாம் பார்த்துக்கொள்ள போவதாக தெரிவித்தார். நீங்கள் இருவரும் ஆண்டது போதுமென நினைத்த பிறகு உங்கள் தம்பிகள் வந்தால் அவர்களுக்கு வழிவிட வேண்டும் என ரஜினி மற்றும் கமலுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Related posts