தமிழ் மக்களின் துயரங்களை கூட்டமைப்பு பயன்படுத்துகின்றது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போலியான வாக்குறுதிகளை நம்பி சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பதால் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்று தமிழ் மக்கள் நினைத்துவிட கூடாது என தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தமிழ் மக்களின் துயரங்களை கூட்டமைப்பு தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றஞ்சுமத்தினார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த தயாசிறி மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் பொய் பிரசாரங்களையே மக்கள் மத்தியில் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறான போலி அரசியலை இம்முறை மக்கள் தோல்வியடையச் செய்ய வேண்டும். கடந்த 30 – 40 வருடங்கள் வடக்கு , கிழக்கில் அமைச்சர்கள் இல்லை.

ஆனால் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமக்கான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர். மாறாக மக்களுக்கான அபிவிருத்தி குறித்து அவர்கள் சிந்திப்பதில்லை. யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது பத்து வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும் இது வரையில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

வடக்கில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பே வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் அந்த பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அபிவிருத்திகளுக்காக பயன்படுத்தப்படவில்லை.

ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு காணப்பட்ட 52 நாட்கள்அரசாங்கத்தில் அங்கஜன் இராமநாதன் விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

எதிர்கட்சியில் இருந்து கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது. அதற்கு அதிகாரமும் அமைச்சு பதவியும் தேவை. எவ்வாறிருப்பினும் கோத்தாபய 54 வீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார்.

அதன் பின்னர் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சுக்கள் வழங்கப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும்.

கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையையே இன்றும் கூட்டமைப்பு பேசிக் கொண்டிருக்கிறது. தேசிய சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். அதுவே எமது கொள்கை திட்டமாகும் என அவர் தெரிவித்தார்.

Related posts