பாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா?

மிரட்டலான கிராபிக்ஸ் மற்றும் அதிக செலவில் பொன்னியின் செல்வன் தயாராகிறது. இந்த திரைப்படம் பாகுபலியை மிஞ்சுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கி உள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் 12-ந்தேதி தாய்லாந்தில் தொடங்குகிறது. இதில் நடிக்க 14 முன்னணி நடிகர்கள் தேர்வாகி உள்ளனர்.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், பழுவேட்டரையராக பிரபு, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் மற்றும் பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம், அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பதாக தகவல்.

2 பாகங்களாக தயாராகும் இந்த படத்துக்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு உள்ளது. ரூ.800 கோடிக்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளனர். ராஜமவுலி இயக்கிய பாகுபலி முதல் பாகம் மற்றும் 2-ம் பாகம் படங்கள்தான் உலக அளவில் அதிக வசூல் குவித்த இந்திய படம் என்ற பெயரை எடுத்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்பில் வந்த ரஜினியின் 2.0, சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, பிரபாசின் சாஹோ, மற்றும் முன்னணி நடிகர்களின் இந்தி படங்கள் எதுவுமே அதன் வசூலை நெருங்கவில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் படம் பாகுபலி வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பாகுபலியில் கிராபிக்ஸ் காட்சிகள் பேசப்பட்டன. அதைவிட பெரிய அளவில் வெளிநாட்டு நிபுணர்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்த திட்டமிட்டுள்ளனர்.

Related posts