சுஜித் மரணம்: மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்

குழந்தை சுஜித் மீட்பு விவகாரத்தில், யார் மீதும் சினம் கொள்ளாமல், குளறுபடிகளுக்கு மனசாட்சியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (அக்.30) வெளியிட்ட அறிக்கையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்பதில் ஏன் அதிமுக அரசு மெத்தனம் காட்டியது என பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நான் கேள்வி கேட்டால், முதல்வர் பழனிசாமி கோபப்படுகிறார்.
“ஸ்டாலின் என்ன விஞ்ஞானியா?” என்று அர்த்தமற்ற கேள்வியைக் கேட்கிறார்; தனது தோல்வியை மறைக்க தவியாய்த் தவிக்கிறார். நான் ஒன்றும் ஒரு விஞ்ஞானியின் கோணத்தில் கேள்வி கேட்கவில்லை; சாதாரண அறிவு கொண்ட சாமானியனாகத்தான் என்னுள் எழுந்த சந்தேகத்தைக் கேட்டேன்.

ஏதோ ஒரு கற்பனை உலகில் மிதக்கும் முதல்வரிடமிருந்து உண்மையை எதிர்பார்க்க முடியாதுதான். நான் எழுப்பிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளைப்போலவே; இன்றைய தினம் தமிழ் நாளிதழ் ஒன்றின் குழுமத்திலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழில், “ஒரு குழந்தையின் உயிரைக் காவு கொடுத்த தவறுகள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையில் எழுப்பியுள்ள ஆணித்தரமான கேள்விகளுக்கு முதல்வர் உரிய முறையில் பதில் சொல்வாரா அல்லது அந்தக் குழுமத்தின் மீது எரிந்து விழுவாரா?

“தாறுமாறாக குளறுபடிகளுடன் நடைபெற்ற மீட்புப் பணி” என்று சொல்லும்
அப்பத்திரிக்கையைப் படிப்பதற்கு முதல்வருக்கு நேரம் இருக்காமலிருக்கலாம் என்பதால் – அந்தக் கேள்விகளை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறேன்.

1. சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த செய்தி, சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவ, தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட 12 மீட்புக் குழுக்கள் சுஜித் விழுந்த இடத்திற்கு அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு வந்தன. சிறுவனை மீட்க ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு மணி நேரம் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒதுக்கிக் கொடுத்து முயற்சி செய்தார். உயிருள்ள – ஆனால் உயிருக்காகப் போராடும் குழந்தையை ஆழ்துளைக் கிணற்றுக்குள் வைத்துக் கொண்டு, மாவட்ட ஆட்சியர் இப்படியொரு சோதனை முறையில் மீட்புப் பணியில் ஈடுபட்டது ஏன்?

2. முதல் நாள் இரவு 9 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு வந்தார். “இரண்டாவது ஆழ்துளைக் கிணறு தோண்ட வேண்டும்” என்பது அவர் எடுத்த முடிவு. பூமிக்கடியில் பாறை இருந்ததால் அந்தக் கிணற்றைத் தோண்ட முடியவில்லை. பாறை இருந்த இடத்தில் தோண்டுவதற்கு அமைச்சர் உத்தரவிட்டது ஏன்?

3. குழந்தை விழுந்து 6 மணிநேரம் கழித்து தேசியப் பேரிடர் மீட்புப் படை அழைக்கப்பட்டது ஏன்?

4. அரக்கோணத்திலிருந்து 5 மணி நேரத்தில் வர வேண்டிய அந்தப் படையினர் சம்பவ இடத்திற்கு வர 12 மணி நேரம் எடுத்துக் கொண்டது ஏன்? ஹெலிகாப்டரில் அவர்களை அழைத்து வராதது ஏன்?

5. மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத்துறை தோல்வியடையும் வரை காத்திருந்து, பிறகு காலதாமதமாக தேசிய பேரிடர் மீட்புப் படையை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியது ஏன்?

6. தேசியப் பேரிடர் மீட்புப் படை, இதுபோன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் பணியை, இதற்கு முன் செய்ததில்லை என்று அதன் செய்தித் தொடர்பாளரே பேட்டி அளித்துள்ளதற்கு அரசின் விளக்கம் என்ன?

7. அக்டோபர் 27 ஆம் தேதி வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் வரும் வரை, 2 நாட்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொறுப்பில் மீட்புப் பணிகளை முதல்வர் ஒப்படைத்தது ஏன்?

8. மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மீட்புப் படைக்கும் கமாண்டர் ஆக இருக்கும் வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், இரு நாட்கள் கழித்து, அக்டோபர் 27 ஆம் தேதியன்று சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்தது ஏன்?
அந்த பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரையில், தற்போதைக்கு குறைந்தபட்சமாக

8 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

“ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்கும் அனுபவம் தேசியப் பேரிடர் மீட்புப் படைக்கு இல்லை. எங்களுக்கு இதுதான் முதல் அனுபவம்” என்று அந்தப் படையின் செய்தித் தொடர்பாளரே பேட்டியளித்திருப்பது, மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

9. “அனுபவம் இல்லாத தேசியப் பேரிடர் மீட்புப் படையை நம்பி அழைத்து, காலத்தை விரயம் செய்ததற்குப் பதிலாக, ராணுவத்தையோ, துணை ராணுவத்தையோ அழைக்காதது அதிமுக அரசின் தோல்விதானே?” என்ற 9 ஆவது கேள்வியும் இயல்பாக எழத்தான் செய்கிறது.

ஆகவே, முதல்வர் பழனிசாமி, அந்த பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரையின் இந்த முக்கியமான- பொதுநலன் சார்ந்த – அடிப்படையான கேள்விகளுக்கு, முதல்வர் என்ற அளவில் கூட அல்ல – மாநிலப் பேரிடர் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் உங்கள் பதில் என்ன?

மாநிலத்தின்- நாட்டின் – அந்த வீட்டின் எதிர்காலமாக இருந்த குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்பதில் படுதோல்வி கண்டுள்ள தங்களின் பதிலையும் விளக்கத்தையும் அறிந்து கொள்ள நான் மட்டுமல்ல – ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றத் தவறியதில் தமிழக அரசின் மீது கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

பதில் சொல்வீர்களா, மாநிலப் பேரிடர் ஆணையத் தலைவரே? உரிய பதில் சொல்லாமல் நீங்கள் பதுங்கிக் கொள்ள முடியாது. நாட்டு மக்களின் – நடுநிலையாளர்களின் மனங்களில் எழுந்திருக்கும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்; பதில் சொல்லும் வரை இந்தக் கேள்விகள் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும்.

யார் மீதும் சினம் கொள்ளாமல், குளறுபடிகளுக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்!

“இவை அனைத்தும் பொய்” என்று, ஒரே போடாகப் போட்டுவிட்டு, கடந்து போக முயற்சி செய்யக்கூடாது என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts