சுஜித் மறைவு: கவிஞர் வைரமுத்து, நடிகர் விவேக்இரங்கல்

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 4 நாட்களாக நடந்து வந்தது. இந்த நிலையில், குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

அதிகாலை 4.30 மணி அளவில் சிறுவன் சுஜித் உடல் இடுக்கி போன்ற கருவி மூலம் பேரிடர் மீட்புக்குழுவினர் உடலை மீட்டனர். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பின் சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, உறவினர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை நடந்தது. பின்னர், உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கவிஞர் வைரமுத்து சுஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில்,

அதோ ஒருத்தியின் கண்ணில் உலகத்தின் கண்ணீர், வந்த மழையும் இனி எந்த மழையும் அந்தத் தாயின் கண்ணீர் கறையைக் கழுவ இயலுமா..

அடே சுஜித் இத்தனை பேர் அழுத கண்ணீரில் நீ மிதந்து மிதந்து மேலெழும்பி இருக்கலாம் ஆனால் அழுத கண்ணீரெல்லாம் உன்னை அழுகவைத்து விட்டதே உன்னை மீட்க கையில் கயிறு கட்டிப்பார்த்தோம், ஆனால் உன் கால் விரலில் கயிறு கட்டிவிட்டதே மரணம்…

எவன் அவன் பின்கூட்டிப் பிறந்த குழந்தைக்கு முன்கூட்டியே சவக்குழி வெட்டியவன் உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ
நடக்கக்கூடாதது நடந்தேறிவிட்டது..

மரணத்தில் பாடம் படிப்பது மடமைச் சமூகம் மரணத்திலும் கல்லாதது அடிமைச் சமூகம். ஏய்… மடமைச் சமூகமே,

வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில் மரணத்தின் பக்கவிளைவு ஞானம் தானே அந்தச் சவக்குழிக்குள் மண் விழுவதற்குள் அத்தனை அபாய குழிகளையும் மூடி விடு..

அந்த மெழுகுவத்தி அனைவதற்குள் அத்துனை கண்ணீரையும் துடைத்து விடு

ஏய்… வானம் பார்க்கும் தொழில்நுட்பமே சற்றே குனிந்து பாதாளம் பார் இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்…

என தனது இரங்கலில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது? என் பதிவிட்டுள்ளார்.

Related posts