உன்னதத்தின் ஆறுதல்! பாகம் 19. 43

துயரங்களில் இருந்து ஆறுதலைத்தரும் தேவன்.
சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியஙகள். – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். மத்தேயு 9:22
இன்று இலங்கையில் பலதரப்பட்ட சூழ்நிலைகளால் ஏற்பட்ட துன்பங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்காக இந்த தியானத்தை எழுதுகிறேன். தேவன் தமது வார்த்தைகள்மேல் நம்பிக்கை வைப்பதன் மூலம் அதாவது கீழ்ப்படிந்து நடப்பதன்மூலம் ஆறுதலைக்கொடுக்க விரும்புகிறார்.

அலைகள் வாசகநேயர்களாகிய நாம் அனைவரும் தேவனின் வார்த்தையின்மேல் நம்பிக்கை வைத்து, எமது வாழ்கையில் காணப்படும் போராட்டங்கள், வேதனைகள், நோயின் கொடுமைகளில் இருந்து விடுதலைபெற்று, சுபீட்சமாக வாழ்வதுடன் அல்லாமல், எமது தேசத்தின் மக்கள்படும் தாங்கொணா இன்னல்களில் இருந்து மக்களையும் தேசத்தையும் காக்கும்படியாக தேவனை நோக்கிப்பார்ப்போம்.

தேவனுடைய வார்த்தையில் உள்ள உண்மையை நாம் விளங்கிக்கொள்ள மாற்கு 5:25-34வரை மிகத்தியானத்துடன் வாசிப்போம். திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்று, அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திhP, அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு, நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி, ஜனக் கூட்டத்துக்குள்ளே அவருக்குப்பின்னாகவந்து அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று. அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சாPரத்தில் உணர்ந்தாள்.

உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி, என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி, திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திhPயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து, மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

அந்த பெண்னின் வேதனையை நாம் சிந்தித்துப் பார்த்தால் புரிந்திருக்கும், அவள் 12 வருடமாக எவ்வளவு வேதனை, துன்பத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட ஓர் சிறையிருப்புடன் கூடியவாழ்வு வாழ்ந்து வந்திருப்பாள் என்று. அத்துடன் அதிகளவு பணத்தை செலவளித்தும் எந்தவித பலனும் அடையாமல் அதிக வருத்தத்துடன் வாழ்ந்து வந்தாள் என்று. இப்படியாக வேதனையுடன் வாழ்ந்த அந்தப்பெண் இயேசுவைப் பற்றியும், அவரின் வல்லமை பற்றியும் அறிந்திருந்தாள். அவளின் செயலும், அறிக்கையும் இதை எமக்கு வெளிப்படுத்துகிறது.

எப்படியும் ஆறுதலைக்காண வேண்டு;ம் என்ற ஒரு தாகத்தை அவளிடம் காணக் கூடியதாக இருந்தது. அந்த தாகம் அவளை ஆறுதலைக்காண வழிவகுத்தது மட்டுமன்றி குறைகள் நீங்கியும், அமைதியாகவும் ஆசீர்வாதமாகவும் வாழ வழிசெய்தது. அதற்கு காரணம் அவள் தேவனின் வார்த்தைமேல் கொண்டிருந்த விசுவாசம் என்கிறதான கரிசனையாகும்.

தேவனுக்குப்பிரியமான வாசகநேயர்களே, அன்று அந்தப் பெண்ணுக்கு தமது வஸ்த்திரத்தின் ஓரத்தின் மூலம் சுகத்தைக்கொடுத்து, அவளின் குறையை நீக்கிய இயேசு, இன்று சுகத்தை, விடுதலையை, ஆசீர்வாதத்தை, வேதனை நீங்கிய சுபீட்சமான வாழ்க்கையை தம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, தம்மை விசுவசிக் கிறவர்கட்கு கொடுக்க விரும்புகிறார். அந்தப் பெண்ணைப்போல எப்படி நான் செயற்படுவது என்று ஒருசிலவேளை நீங்கள் நினைக்கலாம்;. அல்லது 38 வருட காலம் பாவபார அழுத்தத்தால் படுத்திருந்த அந்த திமிர்வாதக்காரனைப்போல் நானும் வேதனையுடன் இருக்கிறேன் என்று கலங்கியிருக்கலாம். விடியலுக்காக காத்திருக்கும் காவலனைப்போல பலவருடங்கள் அமைதியைக்காண காத்திருக்கிறேன் என்றுகூட அங்கலாய்கலாம்.

ஓவ்வொரு ஐப்பசிமாதமும் எமது இனத்தின் காயத்தின் வடுக்களை நினைத்து கதறுபவர்களாகவும் நீங்கள் இருக்கலாம். இன்று தேவனின் வார்த்தைமேல் உனது நம்பிக்கையை வை. இன்றே ஆறுதலைக் கண்டுகொள்வாய். இந்த வேளையை நீயும் பயன்படுத்தி, அவரை விசுவசித்து, அவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவரைப் பணிந்து நடந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்.

நம்மில் எத்தனைபேர் வருடக்கணக்காக பல காரியங்களைச் சுமந்து வருகிறோம். மனுசரை நம்பியே கெட்டுப்போனவர்களாக சலிப்படைந்திருக்கிறோம். இனிவாழ்வே வேண்டாம் என்று வெறுப்படைந்திருக்கிறோம். ஒன்றா, இரண்டா எத்தனை வருடங்கள் நமது அந்தரங்கத்தில் அழுது உடைந்திருக்கிறோம். இந்த நிலைமை இன்றுடன் மாறட்டும். வேதனைகளுடன் மறைந்திருக்கிற நீ எந்த மனிதனிடத்திற்கும் போகவேண்டியதில்லை. இவ்வுலகம் மக்களை நிம்மதியாக வாழவிடா தென்பது உண்மையே. ஆனால் சகலத்தையும் அறிந்த தேவன் நமக்கிருக்கிறார். அவரிடம் நிச்சயம் விடுதலை உண்டு என்பதைமட்டும் நீ மறந்து விடாதே. அவரையே நாடு.

அந்த ஸ்திரி இறுதியாக இயேசுவை நாடினாள். அந்த திமிர்வாதக்காரன் தனக்கு உதவிசெய்ய ஒருவரும் இல்லையே என்று தனது தவிர்ப்பை இயேசுவிடம் வெளிப்படுத்தினான். அவர்கள் இருவரும் ஆறுதல் அடைந்தனர். வேதம் சொல்கிறது, தன்னைநோக்கி கூப்பிடுகிவர்களின் சத்தத்தையும், தன்னிடத்தில் வருகிறவர்களையும் புறம்பே தள்ளாத தேவன் நமக்கு உண்டென்று. அதே தேவன் இன்று உனது வருகையையும், உனது இருதயத்தின் கதறலையும் கேட்டு ஆறுதல்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறார். நீ தயாரா? அந்த தேவனின் வாஞ்சையை நிறைவேற்றி ஆறுதலைக் காண இன்று தீர்மானம் எடுத்து இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து தேவனிடம் ஒப்புக்கொடு.

அன்பின் ஆண்டவரே, இந்த வேதப்பகுதியின்மூலம் உடைந்துபோன இருதயங்களை அறிந்து, அவற்றிற்கு ஆறுதல் அளித்து குணமாக்கி காத்துக் கொள்ளும் தேவன் நீர் ஒருவர் மாத்திரம் என்பதை அறிய உதவி செய்ததற்காக உமக்கு நன்றி அப்பா. நான் இதுவரை காலமும் எனது அந்தரங்கத்தில் போராடியது போதும் என்ற நிலையிலிருந்து, உம்மிடத்தில் இருந்துதான் உண்மையான விடுதலையை பெற

முடியும் என்ற விசுவாசத்துடன்கூடிய நம்பிக்கையுடன் உம்மிடத்தில் வருகிறேன். என்னை குணமாக்கி, விடுதலை தந்து ஆசீர்வதித்து காத்துக்கொள்ளும் படியாக மட்டுமன்றி, எமது தேசத்தின் துன்பதுயரங்கள் நீங்கி, மக்கள் உமது நாமத்தினால் வேதனை நீங்கி அமைதியாக ஆறுதலாக சுபீட்சமாக வழிசெய்யும் படியாக தயவாக மன்றாடிநிற்கிறேன் பிதாவே, ஆமேன்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts