சுஜித்தை மீட்க 5 மணி நேரத்தில் குழி தோண்டி முடிக்கப்படும்

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி, தொடர்ந்து 44 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. சுஜித்தை மீட்க அண்ணா பல்கலை கழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ மூலம் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, தற்போது ‘ரிக்’ இயந்திரம் மூலம் குழந்தையை மீட்க குழி தோண்டப்படுகிறது.

இந்நிலையில் ஆழ்துளைக் கிணறு உள்ள இடத்திற்கு ஓ.என்.ஜி.சி.,யின் ரிக் இயந்திரம் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தது. இதன் மூலம் 98 அடி ஆழம் வரை குழி தோண்டப்பட்ட பின் குழந்தை சிக்கியுளள குழிக்கு சுரங்கப்பாதை அமைத்து குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி இன்று காலை 7 மணியளவில் துவங்கியுள்ளது. காலை 2 மணி வரை 40 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 98 அடி வரை குழி தோண்டிய பின்னர், குழிக்குள் இறங்குவதற்காக 7 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மீட்பு பணி குறித்து திருச்சி கலெக்டர் சிவராசு கூறுகையில், தெர்மாவில் கேமராவின் மூலம் பார்க்கும் போது, குழந்தை மயக்கநிலையில் தான் இருந்துள்ளான். உடலில் இருக்கும் வெப்பநிலையை வைத்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். குழந்தையை மீட்ட பின் தான் தற்போதைய நிலை தெரியும். இதயத்துடிப்பு 20 இருந்தாலே காப்பாற்றி விடலாம். பாறைகளால் தோண்டும் பணி தாமதமாகிறது. அதிநவீன கருவி பயன்படுத்துவதால் அதிர்வு குறைவாக தான் இருக்கும். இன்னும் 5 மணி நேரத்தில் குழி தோண்டி முடிக்கப்படும், எனக் கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: கடின பாறைகள் இருப்பதால் தோண்டுவதில் தாமதம் ஏற்படுகிறது. 90 அடிகள் வரையுமே பாறைகள் இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மீட்பு பணிகள் குறித்து முதல்வர் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

மேலும் குழந்தை சுஜித்தின் இரு கைகளும் கட்டப்பட்டுள்ளதால் 82 அடிக்கு கீழே இறங்கவும் முடியாது என நம்பப்படுகிறது.

திருச்சி, மணப்பாறை அருகே, வேங்கைக்குறிச்சி நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி.இவர்களின் மகன் சுஜீத் வில்சன், 2. ஆரோக்கியராஜ் வீட்டுக்கு பக்கவாட்டில், அவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. மழை பெய்ததால், சோளம் பயிரிட்டுள்ளனர். நிலத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு, துார்ந்து போன ஆழ்துளை கிணறு, மூடப்படாமல் உள்ளது. நிலத்தில், ஒரு அடிக்கு மேல் சோளம் வளர்ந்துள்ளது. நேற்று முன்தினம்(அக்.,25) மாலை, 5:30 மணியளவில், கலாராணி மற்றும் சிலர், வீட்டின் முன் இருந்துள்ளனர். பக்கவாட்டு நிலத்தில், சுஜீத் வில்சன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென குழந்தையின் அலறல் கேட்டுள்ளது. ஓடிச் சென்று பார்த்தபோது, மூடாமல் விட்ட ஆழ்துளை கிணற்றில், குழந்தை விழுந்தது தெரிந்தது.

தகவலறிந்து, மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். சுஜித், 20 – 25 ஆடி ஆழத்துக்குள் இருப்பது தெரிந்தது. ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டும் பணி, தீவிரமாக நடந்தது.

ஒருபுறம் குழந்தையை மீட்க, தீயணைப்பு துறையினர் போராட, மறுபுறம், குழந்தைக்கு எதுவும் நடக்காத வகையில், டாக்டர்கள் குழுவினர், ஆழ்குழாய் உள்ளே ஆக்சிஜன் செலுத்தினர். குழிக்குள் விழுந்த குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், குழந்தையை கண்காணிக்க, கேமராவும் பொருத்தப்பட்டது. மணிகண்டன் என்பவர் வடிவமைத்த பிரத்யோக கருவி வரவழைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடந்தது . இம்முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, பின்னர் கோவையிலிருந்தும் மீட்பு குழுவினர் வந்து முயற்சித்தனர்.

இந்த முயற்சியும் தோல்வியடைந்ததால், மீண்டும் பக்கவாட்டில் பொக்கலைன் மூலம் நாலாபுறம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சி நடந்தது. 15 அடிக்கு கீழே பாறை தென்பட்டதால் பள்ளம் தோண்டும் பணியும் கைவிடப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் 20 அடியில் சிக்கிய குழந்தை 82 அடிக்கும் கீழ் சென்று விட்டார். தற்போதைய நிலையில், குழந்தை அசைவற்ற நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.

கோவை, மதுரை குழுவினர் எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் நாமக்கல் குழுவும் குழந்தையை மீட்க முயற்சி எடுத்தது. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி கலெக்டர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்து, அடுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்தனர். சம்பவ இடத்தில் ஆம்புலன்சும், மருத்துவ குழுவுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts