யாழ். சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அடுத்த மாதம் (நவம்பர்) முதலாம் திகதி இந்த விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபை நேற்று தெரிவித்தது.

ஏற்கனவே இந்த விமான சேவை இம் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது இந்த விமான சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று அதிகார சபையின் அதிகாரி நேற்று தெரிவித்தார்.

இந்தியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்களே இந்த சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. முதலில் பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வாரத்தில் 3 நாட்களுக்கு பலாலிக்கும் சென்னைக்கும் இடையில் இந்த விமான சேவை இடம்பெறும். தேவைகளின் அடிப்படையில் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கும் அந்த நிறுவனம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விமான நிலையம் வடக்கில் ஆரம்பமாவதை அடுத்து அந்த பிரதேசம் மேலும் அபிவிருத்தியடையக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இதே போன்று இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதுடன் மறைமுகமான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

(யாழ். நிருபர்கள் பிரதீபன், சுமித்தி)

Related posts