முன்னாள் LTTE உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலையில் நேற்றிரவு கைதான கிளிநொச்சி, அம்பாள்குளம் இளைஞனின் வீட்டிலிருந்து ரி56 துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்றைய தினம் (11) திருகோணமலை, சேருநுவர, கிளிவெட்டி பாலத்திற்கு அருகில், சேருநுவர இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் ஒருவர் ரி56 துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபர், சேருநுவர பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த ஜோசப் பீட்டர் எனவும், அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று (12) கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள குறித்த நபரின் வீட்டில் கிளிநொச்சி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையில், அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related posts