ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (10) காலை சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
வைத்தியப் பரிசோதனைக்காகவே அவர் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
டி.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை வழக்கு விவகாரம் தொடர்பில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது சிகிச்சை தொடர்பில் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைய, கடந்த ஒக்டோபர் 03 ஆம் திகதி விசேட மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின்போது, நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.
அதற்கமைய இம்மாதம் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை சிகிச்சை நிமித்தம் சிங்கப்பூர் செல்ல அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
கோட்டாபய நாளைய தினம் (11) சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது இரண்டாவது பிரதான தேர்தல் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) மஹர – கடவத்தை பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.