நடிகை கவுரவ கொலை வழக்கு: சகோதரருக்கு ஆயுள் தண்டனை

பாகிஸ்தான் நடிகை கவுரவ கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு பிரபலமானவர் பாகிஸ்தான் கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச். பவுசியா அசிம் என்னும் இயற்பெயரை கொண்ட இவர், டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் பாகிஸ்தான் 2 முறை மோதியது. இதில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக வீடியோ செய்தியில் கூறியிருந்தார்.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு சிறப்பு சலுகை ஒன்றையும் அறிவித்தார். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அவர் என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன் என அந்த வீடியோவில் குவான்டீல் பலூச் அறிவித்திருந்தார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிவாகை சூடியது. இதை தொடர்ந்து சர்ச்சை நடிகை குவான்டீல் பலூச் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

பாகிஸ்தான் வெற்றிபெற முடியாமல் போனது பற்றியும், தனக்கு நிர்வாணமாக நடனம் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்தும் தனது வயிற்றெரிச்சலை ஆற்றும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை அந்த வீடியோவில் திட்டித் தீர்த்திருந்தார்.

இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர்போன குவான்டீல் பலூச் (26) பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட முல்தான் நகரில் உள்ள வீட்டில் கடந்த 15-7-2016 அன்று பிணமாக கிடந்தார்.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு குடும்ப கவுரவத்தை சீர்குலைத்ததால் கழுத்தை நெறித்து, அவரை கொன்று விட்டதாக குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

முல்தான் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த கொலை வழக்கில் 35 சாட்சிகளிடம் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிமுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி இம்ரான் ஷபி, இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த குவான்டீல் பலூச்சின் மற்றொரு சகோதரர் மற்றும் சிலரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

Related posts