அரசினை நம்பி வாக்களியுங்கள் என கோரவில்லை.ஈ.பி.டி.பி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாஜ ராஜபக்ச ஜனாதிபதியானால் நாம் வடக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்குவதுடன் 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தினை ஆறு மாதத்திற்குள் முழுமையான அமுல்ப்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அவர் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜனாதிபதி தேர்தலில் நாம் அரசினை நம்பி வாக்களியுங்கள் என கோரவில்லை.ஈ.பி.டி.பி கட்சியாகிய எம்மை நம்பி வாக்களியுங்கள் என்றே மக்களை கோருகின்றேன்.ஏனெனில் இப்போதுள்ள தமிழ் தலைமைகள் போல நாம் அரசு ஏமாற்றி விட்டது,இந்தியா ஏமாற்றி விட்டது என கூக்குரல் போடமாட்டோம்.நாம் அவ்வாறு ஒரு நாளும் கூறியதில்லை.எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு நான் சொன்னதையே செய்து வருகின்றோம்.அதனையே செய்வோம்.

நாம் அன்றிலிருந்து 13 அவது திருத்த சட்ட மூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே கூறி வருகின்றோம்.அதனை பலப்படுத்தி ஓர் இறுதித் தீர்வினை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுப்போம்.அனால் இங்குள்ள சக தமிழ் கட்சிகள் தீர்வு,கொள்கைகள் பற்றிக் கதைத்துக்கொண்டு இருந்தாலும் அதனை நடைமுறைப் படுத்தவோ அல்லது பெற்றுக் கொடுக்கவோ எந்த வேலைத்திட்டங்களும் இல்லை.

மக்கள் எமக்கு போதுமான வாக்கு பலத்தினை எமக்கு தர வேண்டும்.பலம் கிடைத்தால் விரைவில் தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.எமக்கு ஆதரவு தாருங்கள் என்றே கூறுகின்றோம்.ஆட்சியாளர்களை நம்புங்கள் என கோரவில்லை.நாம் எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.கடந்த காலங்களில் சொன்னதை செய்தும் காட்டியுள்ளோம்.

எமது ஆதாரவான கோத்தபாஜாவின் ஆட்சி மலர்ந்தால் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு,அரசியல் கைதிகள் விடயத்தில் இழுத்தடிப்புக்கள் இல்லது விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்,வீடு,காணி இலலதவர்களுக்கு அதை வழங்குவோம் இவ்வாறான பல முக்கிய பிரச்சனைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வினை காண்போம்.என்றார்.

Related posts