காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை – ராகுல்காந்தி

காஷ்மீரில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை என்று ராகுல்காந்தி எம்.பி., தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370வது பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள் என்று மத்திய அரசு கூறினாலும் அங்கு பெரும்பாலான இடங்களில் இன்னும் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்படவில்லை.

மாநிலத்தை பார்வையிட கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் சென்றபோது ஸ்ரீநகரில் இருந்து திருப்பி விடப்பட்டனர். ஏற்கனவே காஷ்மீருக்கு 2 முறை செல்ல முயன்ற குலாம்நபி ஆசாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல முடிவு செய்தனர்.

ராகுல்காந்தியுடன் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதன்படி, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை தந்தனர்.

ஆனால், விமான நிலையத்திலேயே எதிர்க்கட்சி தலைவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள், மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.

இந்தநிலையில், காஷ்மீர் சென்ற போது, திருப்பி அனுப்பப்பட்ட ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சில நாட்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் காஷ்மீரில் என்ன நிலவரம் என்பதை நேரில் பார்வையிடுங்கள் என்று எங்களுக்கு அழைப்பு விடுத்தார். கவர்னர் அழைப்புவிடுத்ததை தொடர்ந்து என்ன நிலவரம் என்பதை நேரில் பார்வையிடுவதற்காக, எதிர்கட்சி தலைவர்களுடன் அங்கு சென்றோம். ஆனால் விமான நிலையத்திற்கு அப்பால் வெளியே செல்ல எங்களுக்கு அனுமதி இல்லை என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். நாங்கள் அழைத்து சென்ற ஊடக நண்பர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவையெல்லாம் வைத்து பார்க்கும்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை என்பது தெளிவாகிறது என்றார்.

ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்களை சட்டம் ஒழுங்கு காரணமாக திருப்பி அனுப்பபட்டதாக ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

Related posts