கோத்தாபாய ராஜபக்ஷவை தமிழ் மக்கள் ஏற்கமாட்டார்கள்

கோத்தாபாய ராஜபக்ஷ தமிழ் மக்களை பாதிக்ககூடிய மிகவும் கசப்பான உணர்வுகளை எமது மனங்களில் விதைத்துள்ளார் தமிழ் மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள் என என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

இன்று (11) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென் இலங்கையில் இருந்து வரும் தலைவர்களைப் பொறுத்தவரை அவர்கள் அடிப்படைவாத சிந்தனையில் மூழ்கியுள்ளனர். பேரினவாத பிடிக்குள் இறுகியுள்ளனர். பேரினவாதத்தை மட்டும் கையில் வைத்து ஆட்சி செய்பவர்கள் அப்படி இல்லாமல் முற்போக்கு சிந்தனையுடன் சிறுபான்மை மக்களும் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.

இதனால் அறவழி போராட்டங்களும் ஆயுத போராட்டங்களும் நடைபெற்றன. அவற்றின் தீர்வை போரினால் மட்டும் காண முடியாது. மாறாக ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை முலமாக நிரந்தரமான அரசியல் தீர்வை காண்பதன் முலமாகத்தான் தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய ஐக்கியத்தையும் கட்டியெழுப்பமுடியும் என்ற சிந்தனை வரவேண்டும்.

தற்போது தெருவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்னும் கண்ணீருடன் நிற்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் கூறும் பொறுப்பு அவருக்கு உண்டு. இந்த தேசிய இனப் பிரச்சினையை தீர்க்க கூடிய சக்தி, ஆளுமை வலு மிக்க தலைவர்வளாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றியடைவோம் என்று கொக்கரிப்போரை பார்க்கும் போது சிறுபான்மையினர் வெட்கமடைகின்றனர். கோத்தாபாய ராஜபக்சவை பொறுத்தவரையில் அவர் ஒரு பல்லின மக்களை நிர்வகிப்பதற்கான தகுதி அவரிடம் உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தீயவைகளுக்கு அவரும் ஒரு காரணம் என்பது தமிழ் மக்கள் மத்தியிலும் நடுநிலை சிந்தனையாளர்கள் மத்தியிலும் பேசப்படுகிறது. இவ்வாறு பல தீயவைகளை செய்த அவர் இந்த தேசிய பிரச்சினைளை பத்தோடு ஒன்று பதினொன்றாக தட்டிவிடுவார். என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் முதலாவது மாநாடு தற்போது (11) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளராக கோத்தாபய ராஜபக்‌ஷவை அறிவிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர் – வ. சக்திவேல்)

Related posts