ஜனாதிபதித் தேர்தலில் ததேகூ ஆதரவு யாருக்கு – சுமந்திரன் விளக்கம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவித்த பின்னர், அந்த வேட்பாளர்கள் தங்கள் கொள்கை என்ன என்பதை வெளிப்படுத்தினால், அந்த வேட்பாளர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடிய பின்னரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை அறிவிக்கும் என அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த சுமந்திரனிடம், ஜனாதிபதித் தேர்தல் குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியும் தங்கள் வேட்பாளரை இன்னமும் அறிவிக்கவில்லை. ஆக வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பிலும் அந்த வேட்பாளர்களின் கொள்கை என்ன என்பது தொடர்பிலும் இதுவரையில் அறிவிக்கப்படாதவிடத்து நாங்கள் எப்படி அது தொடர்பில் முடிவெடுக்க முடியும்.

ஆகவே, கட்சிகள் தமது வேட்பாளர்களை உத்தியோகபூர்வமாக முதலில் அறிவிக்கட்டும். அதனைத் தொடர்ந்து அந்த வேட்பாளர்கள் தமது கொள்கைகள் என்ன என்பதை வெளிப்படுத்தட்டும். அதன் பின்னர் அந்த வேட்பாளர்கள் அனைவரையும் நாங்கள் சந்தித்து கலந்துரையாடுவோம்.

அவ்வாறு கலந்துரையாடியதன் பின்னதாகவே நாங்கள் எங்கள் முடிவை எடுப்போம் என்றார்.

இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த நாமல் ராஜபக்ஷ கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை என்றும் அவர்கள் தமது சுயநலன்கள் குறித்தே பேசுவதாகவும் குறிப்பிட்டிருந்ததுடன் கூட்டமைப்பினர் மீது பல விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் நாமல் ராஜபக்ஷவின் இக் குற்றச்சாட்டுக்களுக்கு கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா பதிலளிக்கும் போது, நாமல் ராஜபக்ஷ சின்னப்பிள்ளை என்றும் அவருக்கு வரலாறு தெரியாது என்றும் அவர்கள் செய்தததை மக்கள் மறக்கவில்லை என்றும் அவை குறித்து பேசத் தயாரா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறு மாவை சேனாதிராசா வெளியிட்ட கருத்து தொடர்பில் மாவை சேனாதிராசா உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டும் ஒட்டுமொத்தமாக கூட்டமைப்பினரையும் கடுமையாக நாமல் ராஜபக்ஷ விமர்சித்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அத்தோடு கூட்டமைப்பின் உண்மை வேடங்களை மக்களுக்கு அம்பலப்படுத்துவேன் என்றும் எச்சரிக்கையும் செய்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில் கூட்டமைப்பினர் மீது நாமல் ராஜபக்ஷ முன்வைத்த விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கட்சியின் பேச்சாளர் சுமந்திரனிடம் ஊடகவியியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது நாமல் ராஜபக்ஷ சொன்னதற்கு எல்லாம் என்னிடம் கருத்து கேட்க வேண்டாம். அது குறித்து கட்சியில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களிடம் கேளுங்கள் என்று பதிலளித்திருந்தார் சுமந்திரன்.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Related posts