900 நாட்களை எட்டிய போராட்டம்

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டபேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அவர்களால் மேற்கொள்ளபட்டுவரும் சுழற்சிமுறையிலான உணவு தவிர்பு போராட்டம் இன்றுடன் 900 நாட்களை எட்டியுள்ளமையை முன்னிட்டே குறித்த ஆர்ப்பாட்டபேரணி முன்னெடுக்கப்பட்டது.

காலை11.30மணியளவில் போராட்டம் மேற்கொள்ளும் இடத்திலிருந்து கண்டிவீதி வழியாக பேரணியாக சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழர்கள் 1976 இல் சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள், 2015 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பில் நம்பிக்கை இழந்தனர் இப்போது தமிழர்களிற்கு அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளகூடிய புதிய தலைமையே தேவை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமக்கான தீர்வை வழங்க கூட்டமைப்பு தடையாகவுள்ளதாகவும் தெரிவித்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts