விஜய் – அஜித் ரசிகர்கள் மோதல் கத்தி வெட்டு ?

சென்னை புழல் அகதிகள் முகாமில், நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி ஒருவரைக் கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அஜித்குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’, விஜய்யின் ‘பிகில்’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருப்பதால் இரண்டு பேரின் ரசிகர்கள் இடையே தற்போது கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

விஜய் ரசிகர்கள் அஜித் படத்துக்கு எதிராகவும், அஜித் ரசிகர்கள் விஜய் படத்துக்கு எதிராகவும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகிறார்கள். இவர்கள் மோதிக்கொள்வது கவலை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். அவர்கள் சண்டையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மோதல் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறும்போது, “சீரற்ற பருவநிலையால் பல இடங்களில் இயற்கை பேரிடர் நடக்கிறது. வறட்சி நிலவுகிறது. குற்ற சம்பவங்களும் நடக்கின்றன. ஆனால் நமது இளைஞர்கள் விஜய், அஜித் குறித்து தேவையில்லாத விஷயங்களை டிரெண்டாக்கி வருகிறார்கள். ஆக்கப்பூர்வமான காரியங்களை அவர்கள் செய்யலாமே” என்று கூறினார்.

இதுபோல் நடிகை கஸ்தூரியும், “விஜய், அஜித் ரசிகர்கள் மோதலை கைவிட்டு நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும்” என்றார்.

அஸ்வின் கருத்தை பலரும் ஆதரித்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக விஜய் ரசிகர்கள் தங்கள் செயலுக்கு சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்களும் மனம் மாறி விஜய்யை வாழ்த்தி புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அஜித் ரசிகர் எனக் கூறப்படும் உமாசங்கர் என்பவர், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் ரசிகர் எனக் கூறப்படும் ரோஷன் என்பவரிடம் நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரோஷன், உமா சங்கரின் தலை, தோள்பட்டை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியைக்கொண்டு சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த உமாசங்கர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார், ரோஷனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரோஷன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts