வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு குறைந்த நிதி ஒதுக்கிய இந்தியா?

இந்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து இலங்கை வருத்தமடைந்துள்ளது என்றும் இந்தியா டுடே செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடாக இலங்கை விளங்குவதுடன், நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளது.

எனினும், மொரீஷியஸ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கே இந்த ஆண்டில் இந்தியா அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.

கடந்த ஆண்டில் இலங்கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மொரீஷியசுக்கான நிதி ஒதுக்கீடு, 350 கோடியில் இருந்து, 1100 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் முகமது இப்ராஹிம் சோலி அரசாங்கம் பதவிக்கு வந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு 125 கோடி ஒதுக்கப்பட்ட நிதியை இந்த ஆண்டு 576 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது இந்தியா.

இந்தியாவிடம் உதவி பெறும் நாடுகளில் பூட்டானை அடுத்து மொரீஷியசுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு அடுத்ததாக, மாலைத்தீவு நான்காவது அதிகளவு நிதியைப் பெறுகிறது.

பூகோள முக்கியத்துவம் வாய்ந்ததாக இலங்கை இருந்தபோதும், இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதை, கொழும்பு அற்பமாக உணர்ந்ததாக அறியப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கீடு அதன் தேவைகளுக்கு ஏற்ப இல்லை என்று இலங்கை உணர்கிறது என்றும், உதவித் தொகையை இந்தியா மறு ஆய்வு செய்ய வேண்டும் என விரும்புகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related posts