ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்..

ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் தான் பேசியதை ஏற்றுக் கொண்டிருப்பார் எனவும், ராஜராஜனின் பேரன்கள் பல சாதியில் இருப்பதால் பிரச்சினையாக்கி விட்டதாக அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித் கிண்டலடித்துள்ளார்.

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி விட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததும் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் பெற்றவர் அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித்.

2 நாட்களாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு சென்னை திரும்பிய அவர், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசியபோது ராஜராஜன் குறித்து தான் பேசியதை அவர் உயிரோடு இருந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார் என்றார்.

தனது பேச்சால், இந்து தேசியம், தமிழ் தேசியம் பேசுபவர்களும், பல சாதியில் உள்ள ராஜராஜனின் பேரன்களும், மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளதாக கூறி சிரித்தார் அட்டகத்தி ரஞ்சித்.

ராஜராஜன் குறித்த தன்னுடைய கருத்தில் இருந்து எப்போதும் பின் வாங்க போவதில்லை என்றும் தான் யாருக்கும் அஞ்சுவதில்லை என்றும் கூறினார்.

நான் சாதிக்கு எதிராக பேசுகிறேன். இது எனது நேர்மையான மற்றும் நேரடியான முன்னோக்கு கருத்து மற்றும் மக்களின் மனநிலையின் பிரதிபலிப்பாகும். சாதி ஒழிப்பு தொடர்பான தலைப்புகள் குறித்து வெளிப்படையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும் ரஞ்சித் தெரிவித்தார்.

ஏற்கனவே ராஜராஜ சோழன் குறித்த கருத்துக்கு ரஞ்சித்தை நீதிமன்றம் எச்சரித்துள்ள நிலையில் மீண்டும் அதே பாணியில் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts