‘பிகில்’ படத்தின்பாடல் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி

பிகில் படத்தின் சிங்க பெண்ணே என்று தொடங்கும் பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்கார் படத்துக்கு பிறகு விஜய் பிகில் படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. அடுத்தமாதம் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் விஜய் தந்தை, மகன் என்று இருவேடங்களில் வருகிறார். சமீபத்தில் அவரது தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. மகன் விஜய் மைக்கேல் என்ற பெயரில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் அதிக பொருட்செலவில் கால்பந்து மைதான அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கி உள்ளனர்.

படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் விஜய் ஒரு பாடலை பாடி உள்ளார். இந்த பாடலை கடந்த வாரம் பதிவு செய்தனர். தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் பிகில் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடிய சிங்க பெண்ணே என்று தொடங்கும் பாடலை திருட்டுத்தனமாக யாரோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இதை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். சிங்க பெண்ணே என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடல் வெளியானது எப்படி என்று விசாரணை நடத்துகின்றனர்.

பாடலை படத்தில் வைக்கலாமா? எடுத்து விடலாமா? என்று யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

Related posts