சிறுவர்கள் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

நாடு முழுவதும் 18 வயதிற்கு குறைந்த சுமார் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக தேசிய அளவிலான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபைக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த ஆராய்ச்சி அறிக்கையை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், அவ்வறிக்கையில் 18 வயதிற்கு குறைந்த சுமார் 6100 சிறுவர்கள் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் அளவிலானோர் ஹெரோயின் போதைப்பொருளை தேடி அலைவதாகவும் இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 15,000 பெண்களும் 85,000 ஆண்களும் உள்ளடங்குவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று இலட்சம் வரையானோர் கஞ்சா பயன்படுத்துவது இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதுடன், அதில் 1,500 பேர் பெண்களாவர்.

ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட அதிரடி தேடல்களில் போதைப்பொருள் தொடர்பிலான சந்தேகத்தின்பேரில் 40,846 பேர் கடந்த ஆறு மாத காலத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3,500 கிலோகிராம் சட்டவிரோத போதைப்பொருட்களும் கைப்பற்றப் பட்டுள்ளது.

மேலும் ஹெரோயின் 1029 கிலோகிராம், 997 கிராம், 170 மில்லிகிராமுடன் 20309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா 2378 கிலோகிராம், 950 கிராம், 381 மில்லிகிராமுடன் 20015 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது செய்யும் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு நாளாந்த போதைப்பொருள் விநியோகத்தை தடை செய்து, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கென பிரத்தியேக பிரிவொன்றும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நிறுவப்பட்டுள்ளது.

மேலும் நாட்டினுள் போதைப்பொருள் ஊடுறுவும் அனைத்துவிதமான முறைகளையும் கண்டறிவதற்கு விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காக தற்போது மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு அதற்கு உகந்தவாறு மது வரி சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு, எதிர்வரும் வாரத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மது வரி சட்டதிட்டங்களை மீறும் மது வரி அனுமதி பத்திர உரிமையாளர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மது வரி திணைக்களத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மேல் மாகாணத்தில் உள்ளதை அவதானிக்க முடிந்ததுடன், தென் மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வட மாகாணத்திலும் அதிகளவில் போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

அந்த மாகாணங்களில் விசேட புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நாட்டின் அனைத்து பிரதேசங்களும் உள்ளடங்கும் வகையில் போதைப்பொருள் பாவனையின் தீங்குகளை தெளிவூட்டும் நிகழ்வுகளை பாடசாலைகள், அறநெறிப் பாடசாலைகள், தொழில்புரியும் இடங்கள், தன்னார்வு அமைப்புகளில் நடத்துவதற்கும் ஜனாதிபதியின் பணிப்புரைகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts