பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்தவர் மீது துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமண பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவர் மீது கடமையிலிருந்த இராணுவ வீரரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், குறித்த நபர் பலியாகியுள்ளார்.

இன்று (04) நண்பகல் 12.05 மணியளவில் அக்மீமண, மானவில் பிரதேசத்திலுள்ள உபனந்த கனிஷ்ட வித்தியாலயத்தில் இரு இராணுவ வீர்ர்கள் கடமையில் இருந்துள்ளனர். இதன்போது, பாடசாலையின் ஒரு நுழைவாயிலிற்கு அருகில் கடமையிலிருந்த உத்தியோகத்தரை மீறி பலாத்காரமாக பாடசாலைக்குள் நுழைய முற்பட்ட சந்தேகநபரை தடுத்து நிறுத்தி சோதனைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதோடு, இதன்போது குறித்த இராணுவ வீரரை அவரது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கியை பறிக்க முற்பட்டுள்ளார்.

இவ்வேளையில் அவரை தடுத்து நிறுத்த சந்தேக நபர் மீது இராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 39 வயதான குறித்த நபர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அக்மீமண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts